ராமநாதபுரம் அண்ணாநகர் காட்டு நாயக்கர் குடியிருப்பு பகுதியில், வெள்ளிக்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 13 வீடுகள் எரிந்து சாம்பலாகின. இதில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதமானதாகக் கூறப்படுகிறது. ராமநாதபுரம் பழைய பஸ் நிலையம் எதிர்புறம் உள்ளது அண்ணாநகர். இங்கு கூலித் தொழிலாளர்கள் பலர் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இங்குள்ள ஒரு குடிசை வீட்டில் மின் கசிவால் பற்றிய தீ, மளமளவென பக்கத்து வீடுகளுக்கும் பரவியதாம். இதில், 13 பேரின் வீடுகள் எரிந்து சாம்பலாயின. தகவலறிந்த தீயணைப்புப் படை வீரர்கள் வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், வீடுகளில் இருந்த சமையல் பாத்திரங்கள், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் சேதமடைந்தன. சம்பவம் தொடர்பாக, ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதா என போலீஸார் விசாரிக்கின்றனர். தொகுதியில் தங்கி மக்கள் குறைகளை கேட்டுக் கொண்டிருந்த இராமநாதபுரம் எம்.எல்.ஏ. பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாவிபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் பாதிக்கப்பட்ட 13 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில், இலவச வேஷ்டி, சேலைகள், 5 கிலோ அரிசி, தலா ரூ. 2 ஆயிரம் வழங்கினார். அவருடன், கட்சியின் மாவட்டத் தலைவர் சலிமுல்லாகான் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.