முகத்தை மறைக்கும் பர்தா அணிந்து வந்த 2 பெண்கள் பிரான்ஸ் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர் ஆனார்கள்.
கிழக்கு பாரிசில் உள்ள மாக்ஸ் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் முகத்தை மறைக்கும் பர்தாவை அணிந்து அரசு உத்தரவுக்கு எதிப்பு தெரிவித்தவர்கள் ஆவார்கள்.
பிரான்சில் முகத்தை மறைக்கும் பர்தா அணிவதற்கு அரசு தடைவிதித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்த உத்தரவை அரசு பிறப்பித்ததாக தெரிவிக்கப்பட்டது. அரசின் இந்த புதிய சட்டம் அங்கு வசிக்கும் முஸ்லிம் பெண்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தங்கள் மத பண்பாட்டின்படி முகத்தை மறைக்கும் பர்தாக்களை அவர்கள் அணிந்து வருகிறார்கள். அந்த மத நடவடிக்கையை புண்படுத்தும் பிரான்ஸ் அறிவிப்பை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.
அப்போது அரசின் விதியை மீறி பர்தா அணிந்த 2 பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிரான்சில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பர்தா அணிவதற்கு தடை உள்ளது. அந்த தடை உத்தரவு பிரான்சில் உள்ள முஸ்லிம் சமூகத்தினரிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
பர்தா அணிந்து வந்த பெண்களுக்கு 150 யூரோ அபராதம் விதிக்க வேண்டும் என பொது விசாரணையாளர் கூறினார். அந்த பெண்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில்,"இந்த சட்டம் அவர்களுக்கு பொருந்தாது. எனவே அவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார். நீதிமன்றம் தனது தீர்ப்பை வருகிற செப்டம்பர் மாதம் அறிவிக்கிறது.